Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, 4 June 2015

பட்டுப்பூச்சி நியாயங்கள்


வல்லமை.காம் தளத்தில் நடந்த படக்கவிதைப் போட்டியில் (போட்டி எண் - 14) சிறந்த கவிஞர் சிறப்பு ஈட்டித் தந்த கவிதை (பட்டுப்பூச்சி நியாயங்கள்).


Photo Credit: திருமிகு வனிலா பாலாஜி
பட்டுப்பூச்சி நியாயங்கள்


உனக்குத் தெரியுமா?
உன் தோள் சாய்ந்திடும் பட்டு
உன் அடக்குமுறைகளின்
வெளிப்பாடு
உயிரைப் பிழிந்து நூலெடுத்து
கனவுக் கோட்டையை வேய்ந்தது
கல்லெறிந்துக் கலைக்கவா?
இங்கே கொட்டி வைத்துள்ளது
பஞ்சுப் பொதிகள் அல்ல
வெந்து கருகியப் பிஞ்சுக் கனவுகள்
மாய்ந்து மாய்ந்து கட்டிய
கருவறையே
அன்பின் சமாதி ஆனால்?
வெற்றுத் தட்டில் வேதனையும்
பஞ்சுப் பெட்டகத்தில்
பட்டுப் பூச்சிகளின் வெந்த ஆன்மாக்களும்
மட்டுமே மிஞ்சும்!

பாவ நிவிர்த்தி?


பட்டெனப் பூச்சிகள் இறக்க நூல் தந்தன
சட்டென இரக்க யார் தருவார் பட்டுச் சேலை?
கொன்றதன் பாவம் தின்றால் போச்சு..
நூலெடுக்கப் பூச்சிக்களை அழித்த பாவம்
பட்டுடுத்தினால் போகுமா?
உடுக்கப் பருத்திக்கு வழியில்லை
படுக்கப் பாய்க்கு இடமில்லை
உலையிடப் பானையில் அரிசியில்லை
பகட்டுக்குப் பட்டுச்சேலை கிடைக்குமா?
பாவ நிவிர்த்தியாவது மிஞ்சுமா?
உயிரெடுத்து ஒர் உயிர் வளர்த்தேன்
அவன் பல உயிர் காப்பான் என்று நம்பி
நெஞ்சில் குவிந்து கிடக்கு வேதனை
ஆனாலும் முகத்தில் புன்முறுவல் பூசினேன்
‘ஆத்தா நீ பாஸாயிட்டே’ என்று
என் மகனும் வருவான்
மெடிக்கல் காலேஜ் அட்மிஷன் செய்தியோடு…

Friday, 29 May 2015

படக்கவிதை


வல்லமை.காம் படக்கவிதைப் போட்டியில் என் கவிதைகள்.

http://www.vallamai.com/?p=57906

(1) திரிசங்கு சுவர்க்கம்


ஐந்தில் வளையாதது

ஐம்பதில் வளையுமா?
தொட்டிற் பழக்கம்
சுடுகாடு மட்டும்
என்று ப்ரி கேஜிலேயே
வளைத்துப் பழக்குபவர்கள்
பிஞ்சில் பழுத்தவன்
என்று நீ வளர்ந்ததும்
ஒதுக்கலாம்!

மரத்திற்குக் கிளைகள் பலவுண்டு

ஆனால் தண்டு ஒன்றுதான்
உயரப் போனதும் எதிலும் அமரலாம்
ஆனால் உயரப் போக
வழுக்கும் தண்டு
வசப்படாமலும் போகலாம்!
மரத்தைத் தாங்கமட்டும்
விழுதுகள் அல்ல
ஏற கைப்பிடியும் அது தான்
என்றுணர்ந்ததால்
நீ உயரத்தில்

கிளைகளுக்கிடையில்

உன் இருக்கை
தெம்பைத் தருகிறது
திரிசங்கு சுவர்க்கமாயினும்.
கீழே விழுந்து கிடக்கும்
இலைகளும்
நிழலும்
உன்னைச் சுமக்கும்.

மரக் குரங்கு விளையாட அல்ல
உலகைப் பார்க்க
நீ மரத்தில் ஏறினாய்
இன்னும் உயரம் தாண்டிப் பயணம்
இருக்கு
சிரிப்பை மிச்சப்படுத்தி
சிந்தனையைச் செம்மைப்படுத்து.

Photo: திரு. பாபு ராஜ்

(2) கிளை வேண்டும்



பெரிய பச்சை மரமே
உன் கிளையை எனக்குத்
தருவாயா?

தாவி தாவி விளையாட அல்ல
தாபரம் வேண்டி.

விரட்டும் நாய்
மிரட்டும் சிங்கம்
எதுவுமில்லை 
மிட்டாய்த் தருகிறேன் இறங்கி வா...
பள்ளிக்குப் போகலாம் இறங்கி வா...
உயரம் உனக்கு உபத்திரவமே இறங்கி வா...
என்று என்னை இழுத்து இறக்க
நிற்குது கூட்டம் கீழே.
நீ சாயாத வரை
நான் தரையில் விழேன்.

மரத்தைக் கொன்று
வார்த்தையைப் படைக்கும்
பாடம் வேண்டாம்
கரும்பைக் கூழாக்கி
இனிப்பைப் பிரித்துத் தரும்
மிட்டாய் வேண்டாம்
வானம் காட்டும் உன் உயரம் வேண்டும்
கசப்பை விதைக்கும் பழமே போதும்.

பெரிய பச்சை மரமே
உன் கிளையை எனக்குத்
தருவாயா?

Monday, 11 May 2015

ஒரு படம் இரண்டு கவிதைகள்

இதயம் போதும்


காற்றடைத்த பலூனே
உயரப் பறக்கும் போது
உயிரடைத்த உடம்பு
விழுந்தா விடும்
மண்ணில்?

எழுந்து நிற்க
கால்கள் வேண்டாம்
தூக்கி நிறுத்த
துணைகள் வேண்டாம்
இதயம் போதும்!
 
மிரள வேண்டாம் நண்பா
என் கவிதைக்குள் உன்னைக்
காட்சியாக்கி
ஊருக்குள் உன் உரத்தை
உரக்கச் சொல்வேன்...
துணிந்து வா நண்பா.

Photo credit: திரு. பிரேம்குமார் சச்சிதானந்தம்

இனி எல்லாம் கனவில் தான்


பள்ளிக்கூடம் போகலாம்
பாடம் படிக்கலாம்
ஓடி ஆடி விளையாடலாம்
பலூன் உடைத்து விளையாடலாம்
கோவில் கொடையன்று
பலூன் பொம்மைகள் வாங்கலாம்
இனி எல்லாம் கனவில்தான்.

முன்பெல்லாம்
வியாபாரம் முடித்து
மாலையில் தேன் மிட்டாய்
வாங்கிக் கொண்டு வரும் அப்பாவுக்குக்
காத்திருப்போம்…
தெருக் கோடியில்
அப்பாவின் சைக்கிள் சத்தம்
கம்பில் பறக்கும் பலூன்கள் படபடப்பு
காணாமல் போன ஜவ்வு மிட்டாய்
தரும் ஆயிரம் உணர்ச்சிக் குவியல்
இனி எல்லாம் கனவில் தான்.

அம்மா காத்திருப்பாள்
சந்தையில் வாங்கி வரும்
சமையல் சாமான்களுக்காகவும்
பத்திரமாய்க் கூட்டி வரும்
அப்பாவுக்காகவும்.
சீக்கிரம் போட்டோ எடுங்க அண்ணே
வீட்டுக்குப் போகணும்.